×

வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை

 

பழநி, மே 6: பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டத்தைத் தடுக்க தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இப்பகுதியில் சிறுத்தை, வரிப்புலி, காட்டு யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கேளையாடு போன்ற விலங்கினங்களும், தேக்கு, சந்தனம், ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய மூலிகை செடிகளும் அதிகளவில் உள்ளன.

விலங்குகள் வேட்டையாடுவதை தடுத்தல், மரங்கள் வெட்டுவதைத் தடுத்தல், வெளியாட்கள் நடமாட்டத்தை தடுத்தல் போன்ற காரணங்களுக்காக பழநி வனச்சரகம் 11 பீட்டுகளாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தற்போது பழநி வனச்சரகத்தில் வெளியாட்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும், விலங்குகள் வேட்டையாடப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வெளியாட்கள் நடமாட்டம், மரக்கடத்தல், விலங்குகள் வேட்டையாடுதல் போன்றவைகளை தடுப்பதற்காக பழநி வனச்சரகத்தில் உள்ள 11 பீட்டுகளிலும் வன அலுவலர்களைக் கொண்டு தீவிர கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஷிப்ட் முறை அடிப்படையில் 24 மணிநேர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிசர்வ் வனப்பகுதிகளில் அனுமதியின்றி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

The post வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : department ,Palani ,Palani forest ,Dindigul district ,
× RELATED சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை